Friday, May 10, 2013

2013 – 2014 குரு பெயர்ச்சி பலன்கள்!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 

திருக்கணித பஞ்சாங்கப்படி 31.05.2013 வைகாசி மாதம் 17-ம் தேதி வெள்ளிக்கிழமை ரிஷப இராசியில் இருந்து, மிதுன இராசிக்கு சஞ்சாரம் செய்ய போகிறார். மிதுனத்தில் இருந்து துலா இராசி, தனுசு இராசி, கும்ப இராசியை, 5-7-9-ம் பார்வையாக பார்க்க இருக்கிறார்.

இதனால், தற்போது துலாவில் இருக்கும் இரண்டு முக்கிய கிரகங்களான சனி மற்றும் இராகுவின் தீமைகளை சற்று குறைத்து, மக்களுக்கு நன்மைகளை உண்டாக்குவார்.
 
ஐ.டி. துறை, இரும்பு தொழில், வாசனை திரவியங்கள், ரியல் எஸ்டேட், எழுது பொருள் தொழில், ஜவுளி துறை, கட்டட உபகரணங்கள் ஆகிய இவை அனைத்தும் லாபம் பெரும்.
அன்னிய நாடுகள் வீண் விவகாரத்திற்கு வந்தாலும் அடங்கி விடுவர்.
பெரும் மழை, இயற்கை சீற்றங்கள் வர வாய்ப்பள்ளது. அரசியல் ஈடுபாடு உடையவர்களுக்கு சற்று சிரமமான நேரம். பிரச்னைகளை சமாளிக்க பெரும் போராட்டங்களை சந்திக்க வேண்டியது இருக்கும்.
இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் நன்மை, தீமைகளை கலந்தே செய்வார்.  
ஒருவரின் ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷங்களையும் தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர் குரு பகவான். “குரு பார்க்க கோடி புண்ணியம்என்பார்கள். குரு பகவான் நம்மை பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடி சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான்.
உங்கள் வீட்டின் அருகேயே இருக்கும் ஆலயத்தில், நவகிரக சந்நதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வணங்கலாம். மஞ்சள் வஸ்திரம் அணிவிக்கலாம். இதனால் குரு பகவானின் பரிபூரண அருளாசியும், நன்மைகளும் தேடி வரும்.  
குருபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி 31.5.2013 அன்று வெள்ளிக்கிழமை, ரிஷப இராசியில் இருந்து மிதுன இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மிதுனத்திற்கு போகும் குரு, 12 இராசிக்காரர்களுக்கும் எவ்வாறான பலன்களை தருவார் என்று பார்ப்போம்.  
மேஷ இராசி அன்பர்களே... உங்கள் இராசிக்கு குரு, கீர்த்தி ஸ்தானம் என்று சொல்லக்கூடிய மூன்றாம் இடத்தில் பிரவேசிக்கிறார். உங்கள் இராசிக்கு 9-12 க்குரிய குரு பகவான், 3-ம் இடம் செல்வது நன்மையே. இராசிக்கு 12-க்குரிய குரு மூன்றாம் இடத்தில் அமர்ந்தால், எதிர்பாரா யோகத்தை கொடுப்பார். மிதுனத்தில் அமர்ந்த குரு, 7-ம் இடம், 9-ம் இடம், 11-ம் இடத்தை பார்வை செய்கிறார். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் செய்து வைப்பார். குடும்பத்தில் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார். கூட்டுதொழிலில் லாபம், மனைவியால், நண்பர்களால் ஆதாயத்தை கொடுப்பார். பாக்கிய ஸ்தானத்தை பார்வை செய்வதால் வீடு, மனை வாங்க வைப்பார். அயல் நாடுகளுக்கு போகும் பாக்கியம் உண்டாகும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையவும் ஏதுவான காலம். 3-ம் இடத்தில் அமர்ந்த குரு, தன லாபத்தை தருவார்.

ரிஷப இராசி அன்பர்களே...  உங்கள் இராசிக்கு குரு பகவான் 2-ம் இடமான தன ஸ்தானத்தில் அமர்கிறார். அஷ்டம, லாபாதிபதியான குரு, அதாவது 8-11- க்குரிய குரு,  தன ஸ்தானத்தில் அமர்ந்து, ரோக ஸ்தானம், கண்ட ஸ்தானம், ஜீவன ஸ்தானம் எனப்படும், 6-ம் இடம்,  8-ம் இடம், 10-ம் இடம் ஆகியவற்றை பார்வை செய்வதால் கடன் பிரச்சினை தீரும். விரோதங்கள் மறையும். வழக்கு இருப்பின் வெற்றி பெறும். உடல் நலம் பெரும். தீராத பிணி தீரும். ஜீவனம் அமையும். தொழில் துறையில் முன்னேற்றம் வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். திருமணம், குழந்தை பேறு உண்டாகும். சகோதர சகோதரி வர்க்கத்தினருக்கு பொருள் உதவி செய்யும் வாய்ப்பு வரும். அதே சமயம், 8-க்குரியவன் 2-ல் இருப்பதால், கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் இருக்கும். இருப்பினும் தன ஸ்தானத்தில் அமர்ந்த குரு நன்மையே செய்வார்.
 
மிதுன இராசி அன்பர்களே... உங்கள் இராசிக்கு குரு பகவான் ஜென்மத்தில் அமர்கிறார். அதாவது உங்களுக்கு இது ஜென்ம குரு. வனவாசம் போன இராமருக்கு ஜென்ம குரு என்பார்கள். ஆனால், உங்கள் இராசிக்கு 7-10-க்குரிய குரு பகவான் ஜென்மத்தில் அமர்ந்து, 5-ம் இடம், 7-ம் இடம், 9-ம் இடத்தை பார்வை செய்கிறார். குறிப்பாக பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது. எதிர்பார தனவரவு உண்டு. எதிர்பாரா அதிர்ஷ்டம் அடிக்கும். பணக்காரர்களின் நட்பு, தொழில் துறை, உத்தியோக துறையில் நல்ல முன்னெற்றமும் உண்டு. திருமண வாய்ப்பு வரும். கோயில் தரிசனங்கள், யாத்திரை பயணம் ஏற்படும். மனைவியால் ஆதாயம் உண்டு. சொத்துக்கள் வாங்கும் காலம் இது. உடல் நலனில் மட்டும் சற்று அக்கறை தேவை. அரசாங்க ஆதரவு கிடைக்கும். ஜாமீன் விவகாரம் வேண்டாம். கடன் பிரச்சினைகள் தீரும். மேல் அதிகாரிகள் வசம் சற்று கவனமாக நடந்து கொள்ள வேண்டும். மேல் படிப்பு தொடரும். கேந்திர குரு நன்மையே செய்வார்.
 
கடக இராசி அன்பர்களே... உங்கள் இராசிக்கு 12-ல் குரு அமர்கிறார். விரயத்தில் அமர்ந்த குரு நன்மை செய்வாரா என்றால், செய்வார். காரணம், உங்கள் இராசிக்கு 6,9-க்குரியர் குரு பகவான். இதில், 6-ம் அதிபதி, 12-ல் அமைந்தால் நன்மையே செய்வார். இது, “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்” எனப்படும். 12-ல் அமர்ந்த குரு, 4-ம் இடம், 6-ம் இடம், 8-ம் இடத்தை பார்வை செய்கிறார். இதனால், இடப்பெயர்ச்சி ஏற்படும். உத்தியோக மாற்றம் இருக்கும். இடம் மாற்றம் ஏற்படலாம். வாகன விருத்தி உண்டு. கடன் தொல்லை நீங்கும். வழக்கு இருப்பின் வெற்றி பெறும். 8-ம் இடத்தை பார்வை செய்வதால், பெரிய கண்டம் நீங்கும். பல நாட்கள் பீடித்த நோய் விலகும். புத்திர ஸ்தானத்திற்கு 2-ம் இடத்தை பார்வை செய்வதால், புத்திர, புத்திரிகளுக்கு திருமணம் நடக்கும். பட்டபடிப்பும், உயர் கல்வியும் ஏற்படும். தொழில் துறையில் லாபத்தை கொடுப்பார். ஆகவே, இந்த குரு பெயர்ச்சி யோகமே செய்யும்.
 
சிம்ம இராசி அன்பர்களே... உங்கள் இராசிக்கு லாபத்தில் அதாவது, 11-ல் குரு அமர்கிறார். உங்களுக்கு குரு பகவான், பூர்வ புண்ணியாதிபதி, அஷ்டமாதிபதி ஆவார். அதாவது 5-8-க்குரியவரான குரு, லாப ஸ்தானம் என்கிற 11-ல் அமர்ந்து யோகத்தையே செய்வார். இங்கிருந்து உங்கள் இராசிக்கு 3-ம் இடம், 5-ம் இடம், 7-ம் இடத்தை பார்வை செய்கிறார். கீர்த்தி, புகழ் ஏற்படும். சகோதர ஒற்றுமை அமையும். எதிர்பார தனவரவு, ஷேர் மார்கெட்டில் அதிர்ஷ்டம் அடிக்கலாம். ஆபரண சேர்க்கை, சொத்துக்கள் வாங்குவதும் அமையும். 7-ம் ஸ்தானத்தை நோக்குவதால் திருமணம், சுபகாரியங்கள் நடக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தினரால் நன்மைகள் ஏற்படும். உத்தியோக உயர்வு, இடமாற்றம் உண்டு. அதே சமயம், தேவை இல்லா பிரச்சினைகள் வரலாம்.  மறைமுக தொல்லைகளும் வரலாம். ஆனாலும் இவை அனைத்தும் பனி போல் நீங்கி விடும். குரு பகவான் உங்களுக்கு யோகத்தையே செய்வார்.
 
கன்னி இராசி அன்பர்களே... உங்கள் இராசிக்கு, 4,-7-க்குரிய குரு, அதாவது சுக - சப்தமாதிபதியான குரு பகவான், 10-ல் அமர்வது நன்மையே. குருவின் பார்வை தன ஸ்தானத்திலும், சுகஸ்தானத்திலும், ரோக ஸ்தானத்திலும் அமைகிறது. அதாவது 2-ம் இடம், 4-ம் இடம், 6-ம் இடத்தை குரு பார்வை செய்கிறார். எழுதியவன் ஏட்டை கெடுத்தான் பாடியவன் பாட்டை கெடுத்தான் என்பதுபோல, “10-ல் குரு வந்தால் பதவி போகும்” என்று சொல்லி வருவார்கள். ஆனால் உங்கள் இராசிக்கு 10-ல் குரு வந்திருப்பதால் பாதிக்காது. காரணம், குரு பகவான் உங்கள் இராசிக்கு கேந்திராதிபதி ஆவார். குடும்பத்தில் சுபசெலவு ஏற்படும். வெளியூர், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. முன் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். வீண் சச்சரவு வரும். கடன் பிரச்சினையும் வரலாம். நிதானம் தேவை. உத்தியோகம், தொழில் துறையில் மாற்றம் வரும். உடல்நலனில் கவனம் தேவை. முடிந்தளவு செலவுகளை குறைத்து நன்மையை பெறலாம். 
துலா இராசி அன்பர்களே... உங்கள் இராசிக்கு 3, 6-க்குரிய குரு பகவான், பாக்கிய ஸ்தானம் என்னும் 9-ம் இடத்தில் அமர்ந்து, உங்கள் ஜென்ம இராசியையும், கீர்த்தி  ஸ்தானத்தையும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். நீண்ட காலம் இருந்த பிரச்சினைகள் - கடன்கள் தீரும். செய்யும் தொழில் வெற்றி பெறும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். திருமணம், குழந்தை பேறு உண்டாகும். மேல் அதிகாரி வசம் சற்று பணிவு தேவை. அலைச்சல் அதிகம் கொடுக்கும். தேவை இல்லா விரயம் வரும். கடன் விஷயத்தில் கவனம் தேவை. தேவை இல்லாமல் மறுபடியும் கடன் வாங்க வேண்டாம். உறவினர் உதவி வரும். தடைபட்ட கல்வி, தொழில் துவங்கும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். பழைய சொத்துக்கள் கைக்கு வரும். சகோதர ஒற்றுமை வளரும். ஆக, குரு பகவான் நன்மையே செய்வார்.
விருச்சிக இராசி அன்பர்களே... உங்கள் இராசிக்கு 2-ம் இடம், 5-ம் இடத்திற்குரிய குரு பகவான், அதாவது தன, பஞ்சமாதிபதியான குரு, 8-ல் அமர்கிறார். அஷ்டம குரு சற்று தொல்லை கொடுத்தாலும், 2-ம் இடம், 4-ம் இடம், 12-ம் இடத்தை, குரு பார்வை  செய்வதால், அந்த இடங்கள் புண்ணியம் அடைகிறது. விரோதங்கள் மறையும். பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர்பாரா செலவுகள் வரும். அதில் சுபநிகழ்ச்சிகளும் நடக்கும். இருப்பினும், வீடு – மனை விஷயத்தில் வில்லங்கம் வராமல் பார்த்து வாங்கவும். கல்வி தடை அகலும். உத்தியோகத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வரலாம். உறவினர் வசம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உடல்நலனில் அக்கறை தேவை. தொழில் துறையில் ஏற்றம் வரும். கூட்டு தொழிலில் சற்று கவனம் தேவை. உங்கள் இராசிக்கு மூன்றாம் அதிபதியான குரு பகவான், 8-ல் இருப்பதால் சோதனைகளும் சாதனைகளாகும். 
தனுசு இராசி அன்பர்களே... உங்கள் இராசிக்கு ஜென்மாதிபதியும், 4-ம் அதிபதியுமான குரு பகவான், சப்தமத்தில் அதாவது 7-ல் அமர்ந்து, உங்கள் ஜென்ம இராசியையும், கீர்த்தி ஸ்தானம் என்கிற மூன்றாம் இடத்தையும், லாப ஸ்தானம் என்கிற 11-ம் இடத்தையும் பார்வை செய்கிறார். லாப ஸ்தானத்தை குரு பார்வை செய்வதால், எதிர்பாரா தனவரவு, வெளிநாடு நண்பர்களின் உதவி, கணவனாலும் அல்லது மனைவியாலும் தன லாபம் ஏற்படும். தொட்டது துலங்கும். புகழ், கீர்த்தி ஏற்படும். உத்தியோகம், தொழில் துறையில் முன்னேற்றம் உண்டு. பல நாட்களாக வீடு, மனை வாங்க வேண்டும் என்கிற உங்கள் கனவு நிறைவேறும். சுப செலவுகள் அதிகம் ஏற்படும். சகோதர வர்க்கத்தில் பகை இருப்பின் விலகும். பிரயாணங்கள் அதிகம் உண்டு. வழக்கு, கடன் பிரச்சினை தீரும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பூர்வீக சொத்துக்களில் கொஞ்சமாவது கைக்கு வரும். பொதுவாக சப்தம குரு எதிர்பாரா யோகத்தை அள்ளி கொடுப்பான்.
 
மகர இராசி அன்பர்களே... உங்கள் இராசிக்கு, திரிதிய – விரயாதிபதியான குரு அதாவது, 3 மற்றும் 12-ம் அதிபதியான குரு பகவான், 6-ல் அமர்ந்து, உங்கள் இராசிக்கு 2-ம் இடம், 10-ம் இடம் மற்றும் 12-ம் இடத்தை பார்வை செய்கிறார். உங்களுக்கு பண வரவு சிறப்பாகவே இருக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாக்கு பலிதம் உண்டு. அதேபோல தேவை இல்லா விரயங்களும் வரும். வழக்கு பிரச்சினை வரலாம். கவனம் தேவை. உத்தியோக உயர்வு, தொழில் துறையில் மாற்றம் அமையலாம். சொத்துக்கள் வாங்கும்போது, சரியான சட்ட வல்லுனர்களை ஆலோசித்து வாங்குவது நல்லது. குரு பகவான், தேவை இல்லா கடன் வாங்க வைத்து விடுவார். குரு நன்மைகளை கொடுத்தாலும் சற்று பிரச்சினைகளை கொடுப்பார். யாருக்கும் பெரிய அளவில் பண உதவி  செய்யாமல் இருப்பது நல்லது. தேவை இல்லா விரோதங்கள் வரும். நோய் நொடிகள் நீங்கும். வீண் விரயங்களை தவிர்க்கவும்.
 
கும்ப இராசி அன்பர்களே... உங்கள் இராசிக்கு தன-லாபாதிபதி எனும் 2-11-க்குரிய குரு பகவான், அருமையாக பஞ்சம ஸ்தானம் என்கிற 5-ம் இடத்தில் அமர்ந்து விட்டார். அங்கிருந்து ஜென்மத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். நினைத்தது நடக்கும். 9-ம் இடம், 11-ம் இடம், குருவின் பார்வையை பெறுவதால், கைவிட்டுபோன பொருட்கள் அத்தனையும் திரும்பி வரும். சொத்துக்கள் வாங்கும் யோக நேரம் இது. எதிர்பாரா லாபத்தை வழங்குவார். சுபகாரியங்கள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். நோய்நொடிகள் அகலும். நண்பர்களின் உதவி கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உத்தியோக உயர்வு உண்டு. மேல்அதிகாரி பாராட்டு கிடைக்கும். வாடிய தொழில் செழித்து வளரும். மண்ணை தொட்டாலும் பொன்னாகும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு யோகம் தரும். 
  
மீன இராசி அன்பர்களே... உங்கள் இராசிக்கு ஜென்மாதிபதியும், பத்தாம் அதிபதியுமான குரு பகவான், கேந்திரத்தில் அதாவது 4-ம் இடத்தில் அமர்ந்து விட்டார். கேந்திராதிபதி கேந்திரம் ஏறியது நன்மையே. இந்த 4-ம் இடம் சுகஸ்தானம் ஆகும். இங்கிருக்கும் குரு பகவான், உங்கள் இராசிக்கு 8-ம் இடம், 10-இடம், 12-ம் இடத்தை பார்வை செய்கிறார். நோய் நொடிகள் குறையும். உடல்நலம் பெறும். கஷ்டங்கள் தீரும். பகைவனும் நண்பனாவான். ஜீவனம் பெருகும். தொழில் அமோக வளர்ச்சி பெறும். புதிய தொழிலும் துவங்கும். விரயங்கள் தவிர்க்கப்படும். யாத்திரை பயணம் கிட்டும். வீடு புதுபித்தல், வாகனம் வாங்குதல் போன்றவை அமையும். குடும்ப ஸ்தானத்திற்கு லாப ஸ்தானத்தை குரு பார்வை செய்வதால், குடும்பத்தில் திருமணம் போன்ற சுபசெலவுகள் ஏற்படும். உறவினர் ஒற்றுமை வளரும். பொதுவாக மேல்படிப்பு, உத்தியோக உயர்வு அத்தனையும் சுகஸ்தான குரு சுகமாக கொடுப்பார். 
 
For More Articles in ENGLISH & TAMIL Visit: www.bhakthiplanet.com
 

Matrimony
Free Register For All Community REGISTER NOW  http://www.manamakkalmalai.com/

Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
www.bhakthiplanet.com
 
http://bhakthiplanet.com/ebooks/



For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com  

© 2013 www.bhakthiplanet.com All Rights Reserved