Wednesday, October 28, 2015

நரகாசுரனை வீழ்த்த உதவிய சத்தியபாமா! தீபாவளி சிறப்பு கட்டுரை



ஆண் சக்தி இருந்தாலும் அந்த ஆணுக்கு, பெண் சக்தியும் துணை இருந்தால்தான் எடுக்கும் முயற்சி விரைவாக முடியும் என்பதால்தான் சிவபெருமான் சக்திதேவியை தமது இடது பாகத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

அதுபோலவே, திருமாலும் தன் மார்பில் ஸ்ரீமகாலஷ்மியை இடம் பெற செய்தார். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கிறாள் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. அதுபோலதான், நரகாசுரனை வீழ்த்தியது கிருஷ்ணர் என்று பலர் நினைத்தாலும், சத்தியபாமாவால்தான் நரகாசுரனை வீழ்த்த முடிந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை பற்றி விரிவாக தெரிந்துக் கொள்ளலாமா? 

பூமாதேவியின் மகன் நரகாசுரன்

பூமாதேவியின் மகன் நரகாசுரன். தாய்க்குதான் தெரியும் தன் பிள்ளைகளின் குணம். நரகாசுரன் மற்றவர்களுக்கு நரக வேதனை தருவான் என்பதை உணர்ந்தாள் பூமாதேவி. அதனால் அவனுக்கு நிச்சயம் மரணம் தேடி வரும் என்று உணர்ந்துக் கொண்டாலள்.. அதனால்தான் திருமாலிடம் தன் மகனுக்கு அழிவில்லா வாழ்க்கை வேண்டும் என்று வரம் கேட்டாள்.

அதற்கு பெருமாள், “அது சாத்தியம் இல்லை. படைப்பு ஒன்று இருந்தால், நிச்சயம் அழிவும் இருக்கும். என்றார். அதேசமயம், “தாயான உன் கைகளால் நரகாசுரன் மரணம் அடைவான். என்ற வரம் தந்தார் திருமால். இதை கேட்ட பூமாதேவி ஏக மகிழ்ச்சி கடலில் மிதந்தாள்.

என் மகனை நானே எப்படி கொல்வேன். அது கனவிலும் நடக்க போவதில்லை. இந்த வரம் போதும். ஒரு ராட்ஷசி கூட தான் பெற்ற பிள்ளைகளை கொல்ல மாட்டாள். ஆகவே தன்னால் தன் மகனுக்கு மரணம் இல்லா வாழ்க்கை அமைந்து விட்டது. என்று மகிழ்ந்தாள்.

விதி வலியது. அது யாரை விட்டு வைத்தது?

நரகாசுரனை மட்டும் விதி விட்டு வைக்குமா என்ன?

காலம் மாறும் போது, காட்சியும் மாறும். ஆம், யாரும் எதிர்பாராத மாற்றம் அது. நரகாசுரனே யுகிக்க முடியாத மாற்றம் அது.

தன் தாயால்தான் தமக்கு மரணம் என்பதை தெரிந்துக்கொண்ட நரகாசுரன், ஏக
கொண்டாடத்தில் கர்வம் அவன் தலைக்கு ஏறியது. இதனால் தேவர்களையும், முனிவர்களையும், கந்தவர்களையும், பெண்களையும் சிறை பிடித்தான். இந்திரனின் தாய் அதிதியின் அமுதம் ததும்பும் குண்டலங்களையும் எடுத்துக்கொண்டான்.

இனி பொறுமையாக  இருந்தால் அக்கிரமங்கள் தலைவிரித்தாடும், பெண்கள் கொடியவர்களால் சீரழிக்கபடுவார்கள் என்று அஞ்சிய தேவர்கள், ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவிடம் சென்று முறையிட்டார்கள்.

நரகாசுரனை விட வலுவான பாதுகாப்பான கோட்டை

கிருஷ்ணா, நரகனை எங்களால் வெல்ல முடியாமல், அவனை நெருங்க கூட முடியாமல் அவதிப்படுகிறோம். அனைவரையும் அவன் சிறை பிடித்து வைத்துள்ளான். அவன் இருக்கும், “பிராக் ஜோதிஷபுரத்தை சுற்றி மதில் சுவர் எழுப்பி அதில், சிறுசிறு கத்திகள் பதித்திருக்கிறான். அத்துடன், அவனுக்கு நிகரான வல்லமை கொண்ட தேவர்களை அடிமைப்படுத்தி தன் கோட்டைக்கு பாதுகாப்பாக அமர்த்தி இருக்கிறான்.

முதல் பகுதியில் மலையே அரணாக இருக்கிறது மறு பகுதியில் சமுத்திரம் அரணாக இருக்கிறது. மூன்றாவது பகுதியில் வாயு பகவான் காவல் இருக்கிறான். நான்காவது பக்கத்தில் அக்னி காவல் காக்கிறான். இவர்கள் நரகாசுரனுக்கு பயந்து அவனை காக்கும் பொறுப்பில் இருக்கிறார்கள்.

இவர்களை கடந்து யாராலும் நரகாசுரனை நெருங்க முடியாது. ஆனால் நீயே உன் சக்தியால் அவனை வீழ்த்த இயலும்.என்றார்கள் தேவர்கள்.

அதை கேட்ட ஸ்ரீபகவான் கிருஷ்ணர், மெல்லிய புன்னகையோடு, “தன்னுடன் சத்தியபாமாவும் வர வேண்டும்”. என்றார்.

காரணம்,பூமாதேவிக்கு ஒரு வரம் தரப்பட்டுள்ளது. நரகாசுரனுக்கு பூமாதேவியால்தான் மரணம் என்பதே அந்த வரம். அந்த பூமாதேவிதான் சத்ரஜித்தின் மகள் சத்தியபாமாவாக தோன்றியிருக்கிறாள். என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.

சத்தியபாமா வில் வித்தையில் கைதேர்ந்தவள்.

பூமாதேவியே மறுபிறவில் சத்தியபாமாவாக பிறந்தாள்.

நரகாசுரனை வீழத்த போருக்கு புறப்பட்டாள் சத்தியபாமா.

நரகனை அழிக்க அவனது கோட்டைக்கே வந்தார்கள் ஸ்ரீகிருஷ்ணரும், சத்தியபாமாவும். ஆனால் நரகனிடம் நெருங்க விடாமல் தடுத்த கிரிதுர்கம், அக்னிதுர்கம், ஜலதுர்கம், வாயுதுர்கம் போன்ற பாதுகாப்பு அரண்களை முதலில் அழித்தார் ஸ்ரீகிருஷ்ணர். இதை கேள்விபட்ட நரகாசுரனின் மந்திரியான முரன், பெரும் படையோடு வந்து ஸ்ரீகிருஷ்ணரிடம் போர் புரிந்தான். ஆனால், ஸ்ரீகிருஷ்ணரிடம் தோற்ற முரன், மாண்டன். இதனால் தேவர்கள் மகிழ்ந்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை முராரி என்று  போற்றினார்கள்.

நரகாசுரனுடன் நடந்த போரில் சத்தியபாமா கோபத்துடன் நரகனின் மீது அம்பு மழை பொழிந்தாள். ஸ்ரீகிருஷ்ணரும் தன் சக்கரத்தை ஏவ, ஒரே சமயத்தில் இரண்டும் நரகாசுரனை தாக்கியதால், நிலைகுலைந்து பூமியில் சாய்ந்தான் நரகன்.

இப்போது தெரிந்ததா? நரகாசுரனை, ஸ்ரீகிருஷ்ணருடன், சத்தியபாமாவும் சேர்ந்துதான் வீழ்த்தினார் என்கிற புராண உண்மை.

பெண்களுக்கு பெருமை சேர்த்த கருமை நிற கண்ணன்

ஸ்ரீகிருஷ்ண பகவானால் நரகாசுரனை வீழ்த்த முடியும் என்றாலும், பெண்ணை இந்த மண் போற்ற வேண்டும் என்பதால்தான் பூமாதேவியிடம், “உன்னால் உன் மகனுக்கு மரணம் ஏற்படும் என்ற வரத்தை தந்து, மறுபிறவில் பூமாதேவியையே சத்தியபாமாவாக தோன்ற வைத்து, நரகனை வீழ்த்த தன் போர் படையில் சத்தியபாமாவை இடம் பெறச் செய்து, பெண்ணுக்கு பெருமை வாங்கி தந்தார், கோகுல கண்ணன் - ஸ்ரீகிருஷ்ணர்.

ஸ்ரீசர்வம் கிருஷ்ணார்ப்பணம்!

தீபாவளி அன்று கடைபிடிக்க வேண்டிய சாஸ்திர பரிகாரங்கள்தீபாவளி சிறப்பு கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 


ஒளிமயமான வாழ்க்கைக்கு தீப ஒளி தீபாவளி : தீபாவளி பூஜை முறை படிக்க கிளிக் செய்யவும் 



Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 









© 2015www.bhakthiplanet.com All Rights Reserved