Tuesday, August 8, 2017

குரு பெயர்ச்சி பலன்கள் 2017- 2018

Sri Durga Devi upasakar,

V.G.Krishnarau.

:::குரு பெயர்ச்சி பொது பலன்கள் :::


குரு பகவான் 02.09.2017 அன்று கன்னி இராசியில் இருந்து துலாம் இராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். சித்திரை நட்சத்திரமான செவ்வாய் சாரத்தில் குரு பகவான் வருவது, நாட்டில் பல நன்மைகளை தந்தாலும், சில தீமைகளும் நடக்கும். நாட்டின் பொருளாதாரம் மேன்மை பெறும். கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பிடிப்படுவர். அண்டை நாட்டு போர் பிரச்னைகள் முறியடிக்கப்படும் புதிய தொழில்கள் அறிமுகம் ஆகும்.

அண்டை நாடுகளில் நம் நாடு கௌரவிக்கப்படும். ரியல் எஸ்டேட், கலைத்துறையினர் சில மாற்றங்களை பெறுவார்கள். அரசியலிலும் பல மாற்றங்கள் வரும். பேய் மழை என்பார்களே அப்படி வரப் போகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் இருக்கும். துலா இராசியில் குரு பகவான் அமரப்போவதால் அரசியலில் ஈடுபடும் மகளிருக்கு சற்று சோதனை நேரம். செவ்வாய் சாரத்தில் குரு அமர்வதால், தமிழகத்தில் அரசியல் குழப்பங்கள் அதிகரிக்கும். கலைதுறையில் உள்ளவர்களுக்கும் இந்த பெயர்ச்சி சற்று பிரச்னையான நேரமே. உணவு உற்பத்தியில் பாதிப்பு வராமல், வெள்ளப்பெருக்கு அபாயம் இல்லாமல் காக்க ஸ்ரீதுர்காதேவியை பிராத்தனை செய்கிறேன்.

இப்பொழுது 12 இராசி அன்பர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

மேஷ இராசி அன்பர்களே உங்கள் இராசிக்கு 7-ம் வீட்டுக்கு குரு பகவான் 02.09.2017 அன்று பெயர்ச்சி ஆகி வருகிறார். குரு பகவான் செவ்வாய் சாரத்தில் அமர்வதால், உங்களுக்கு பெரிய யோகம்தான். இராசியாதிபதி சாரத்தில் பாக்கியாதிபதி அமர்வதால், பண வரவு தேடி வரும். சொத்துக்கள் வாங்குவீர்கள். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். சப்தமத்தில் அமர்வதால், கடந்த காலத்தில் பட்ட கஷ்டங்கள் கரைந்து போகும். வீட்டில் சுபங்கள் நிகழம். ஜென்ம இராசியையும், கீர்த்திஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்வை செய்வதால், மற்றவர்களால் பாராட்டப் பெறுவீர்கள். மண்ணை தொட்டாலும் பொன்னாகும். இவை அனைத்தையும் கொடுக்கும் குரு பகவான் உங்களை உஷாராகவும் இருக்க சொல்கிறார்.

ஏன் எதனால் ?

ஒரு பக்கம் இராசியாதிபதி சாரத்தில் இருந்தாலும், அதே செவ்வாய் உங்களுக்கு அஷ்டமாதிபதி சாரத்தையும் பெறுகிறார். உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது. அவசியம் இல்லாமல் கடன் வாங்காதீர்கள். வீண் கௌரவத்திற்காக செலவுகளை செய்யாதீர்கள். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போட்டு பிறகு சிக்கலில் மாட்டிக்கொண்டு முழிக்க வேண்டாம். பொதுவாக பாக்கிய குரு யோகம் கொடுப்பார். சிந்தித்து செயல்படுத்தி நல்ல விதத்தில் குரு பெயர்ச்சியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நல்வாழ்த்துக்கள்.

ரிஷப இராசி அன்பர்களே உங்கள் இராசிக்கு 6-ம் வீட்டுக்கு குரு பகவான் 02.09.2017 அன்று பெயர்ச்சி ஆகி வருகிறார். செவ்வாய் சாரத்தில் அதாவது 7, 12-க்குரியவர் சாரத்தில் அமர போகிறார். சிலர் கூறுவார்கள்… 6-ம் இடத்தில் குரு அமரக் கூடாதென்று. ஆனாலும் பயம் வேண்டாம். 8-க்குரியவன் 6-ம் இடத்தில் அமரலாம். இது உங்களுக்கு விபரீத யோகத்தை தரும் குரு பெயர்ச்சியாக இருக்கும். உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக வரும். கல்வி தொடரும்.

தனஸ்தானத்தை, ஜீவனஸ்தானத்தை, விரயஸ்தானத்தை குரு பார்வை செய்வது, எப்படியோ பணத் தட்டுபாட்டை நீக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். விரோதம் மறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு மணவாழ்க்கை யோகம் அமைத்து தரும். குழந்தை பாக்கியம் கிட்டும். அதேபோல, உஷாராக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்று கணிக்கும்போது, மற்றவர்கள் உங்களை கோபம் கொள்ள செய்வார்கள். பதட்டம் அடைய செய்வார்கள். அதை பற்றி கடுகளவும் கவலைப்படாதீர்கள். குழப்பம் தரும் யோசனைகள் வேண்டாம். நீங்கள் சும்மா இருந்தாலும் பிரச்னை முதுகை தட்டும். நீங்கள் திருப்பி கூட பார்க்க வேண்டாம். நண்பர்களாக நடிப்பவர்களிடம் கவனமாக இருங்கள். மற்றபடி, குரு பகவான் வாரி வழங்குவார். நல்வாழ்த்துக்கள்.

மிதுன இராசி அன்பர்களே உங்கள் இராசிக்கு 5-ம் வீட்டுக்கு குரு பகவான் 02.09.2017 அன்று பெயர்ச்சி ஆகி வருகிறார். 6, 11-க்குரிய செவ்வாய் சாரத்தில் பெயர்ச்சி ஆவதால், நன்மைகள் நடக்கும். 7, 10-க்குரிய குரு பகவான், பஞ்சமத்தில் அமர்கிறார். பட்ட துன்பங்கள், அலைச்சல்கள் அத்தனையும் பஞ்சு போல் பறந்துவிடும். உங்கள் ஜென்ம இராசியை, பாக்கியஸ்தானத்தை, லாபஸ்தானத்தை குரு பார்வை செய்வதால், தடைப்பட்ட கல்வி தொடரும். வேலை வாய்ப்பு தேடி வரும். அயல்நாட்டில் உள்ளவர்கள் மூலமாக ஆதாயம் பெறுவீர்கள். வாடகை வீட்டில் அல்லல்படுவோர் இனி சொந்த வீடு வாங்கி சுபயோகம் காண்பீர்கள். பெற்றோரின் உதவி கிடைக்கும். பழைய சொத்துக்கள் சிலருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்களும் இருக்கிறது.

எந்த வகையில் தெரியுமா?

குரு பகவான் 6-க்குரிய சாரத்தையும் பெறுகிற காரணத்தால், பயணங்களில் கவனம், அடுத்தவர்களுக்கு கடன் கொடுப்பதில் கவனம், கூட்டு தொழில் செய்வதில் மிக, மிக, கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியம். பொதுவாக, குரு பகவான் இந்த பெயர்ச்சியில் நற்பலன் தருவார். நல்வாழ்த்துக்கள்.
கடக இராசி அன்பர்களேஉங்கள் இராசிக்கு குரு பகவான் 4-ம் இடத்திற்கு 02.09.2017 அன்று பெயர்ச்சி ஆகி வருகிறார். 5, 10-க்குரிய செவ்வாய் சாரத்தில் பெயர்ச்சி பெறுவதால் இனி நற்பலன்கள் தேடி வரும். சிலர் 4-ம் இடத்தில் குரு அமர்வது நன்மை தராது என்பார்கள். திரிகோணதிபதி, கேந்திரத்தில் அமர்ந்தால் நன்மைகளை வாரி வழங்குவார். 8, 10, 12-ம் இடங்களை குரு பார்வை செய்வார். புதிய தொழில் துவங்க வாய்ப்பு வரும். குடும்பத்தில் சுபசெலவுகள் தரும். இத்தனை நாட்கள் பீடித்திருந்த நோய் விலகும். குழப்பங்கள் தீர வழி பிறக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். பழைய வீட்டை புதுமைப்படுத்துவீர்கள். நலிந்த தொழில் புத்துயிர் பெரும். அயல்நாட்டில் இருப்பவர்களின் உதவிகள் பெரிய அளவில் வரும். அரசாங்க ஆதரவு கிடைக்கும்.

மற்றபடி, எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

உடலந்லனில் அக்கரை செலுத்துங்கள். செலவு செய்வதில் கவனம் தேவை. வாகன விஷயத்தில் நிதானம் அவசியம் வேண்டும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கவும். கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருங்கள். பொதுவாக, இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் நன்மைகளையே தருவார். நல்வாழ்த்துக்கள்.

சிம்ம இராசி அன்பர்களேஉங்கள் இராசிக்கு 3-ம் இடத்திற்கு 02.09.2017 அன்று குரு பகவான் பெயர்ச்சி ஆகி வருகிறார். இராசிக்கு 7, 9, 11 அதாவது களத்திரஸ்தானம், பாக்கியஸ்தானம், லாபஸ்தானம் ஆகிய இடங்களை குரு பார்வை செய்வதால், எதிர்பாரா யோகம் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து சுமுகமான சூழ்நிலை உருவாகும். சொந்த வீடு, வாகனம் அமையும். வெளிநாடு ஏற்றுமதி-இறக்குமதி தொழில் துவங்குவீர்கள். பெற்றோர் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு திருமணமும், புத்திர பாக்கியமும் அமையும். செவ்வாய் சாரத்தில் அதாவது சுக, பாக்கியாதிபதி சாரத்தில் அமர்வதால் மேற்படிப்பு, பட்டப்படிப்பு அமையும். உறவினர் வருகை அதிகரிக்கும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். சகோதர-சகோதரி வழியில் நன்மைகள் நடக்கும். கடன் சுமைகள் குறையும். திட்டங்கள் நிறைவேறும். விரோதிகள் அடிபணிவர். வழக்கு விஷயத்தில் வெற்றி தரும்.

சரி, எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

உடல்நலனில் கவனம் தேவை. பிரயாணத்தில் கவனம் நல்லது. பர,பரப்பு, பதட்டம் இல்லாமல் இருக்க வேண்டும். கூட்டு தொழிலிலும், ஜாமீன் தருவதிலும் எச்சரிக்கை அவசியம். மற்றபடி, இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் அள்ளி தருவார். நல்வாழ்த்துக்கள்.

கன்னி இராசி அன்பர்களேஉங்கள் இராசிக்கு தனஸ்தானம் என்கிற 2-ம் வீட்டுக்கு குரு பகவான் 02.09.2017 அன்று பெயர்ச்சி ஆகி வருகிறார். இராசிக்கு 3, 8-க்குரிய செவ்வாய் சாரத்தில் அமரப் போவதால் பெரும் நன்மைகளும், சிறு தீமைகளும் தருவார். 4, 7-க்குரிய குரு பகவான், தனஸ்தானத்தில் இருப்பது வெகு அருமை. நினைத்தது நடக்கும். மண்ணை தொட்டாலும் பொன்னாகும். இந்த குரு பெயர்ச்சி வெகு நற்பலனை வாரி வழங்கும். பணவரவு தாராளமாக வந்துக்கொண்டு இருக்கும். கடன் சுமை அத்தனையும் தீரும். புதிய தொழில் தொடங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மற்றவர்கள் புகழும் அளவிற்கு வாழ்க்கை தரம் உயரும். முக்கியமாக, குரு பகவான் 8-ம் வீட்டை பார்வை செய்வதால், வழக்கு விவகாரத்தில் கவனமாக இருங்கள். பிரச்னைகள் தேடி வரும். மௌனமும், அமைதியும் அவசியம். சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் மிக, மிக கவனமாக அனுகுங்கள். வியபாரத்தில் ஒரே நேரத்தில் பெரிய முதலீடு செய்யாமல் சிறுக, சிறுக முதலீடு செய்வதே நல்லது. கூட்டாக செய்யும்போது உங்கள் பக்கம் கவனமாக இருங்கள். மற்றபடி, குரு பகவான் இந்த பெயர்ச்சியில் கிள்ளியும் விடுவார். அள்ளியும் கொடுப்பார். நல்வாழ்த்துக்கள்.

துலாம் இராசி அன்பர்களேஉங்கள் இராசிக்கு 02.09.2017 அன்று உங்கள் இராசிலேயே ஜென்ம குருவாக குரு பகவான் பெயர்ச்சி ஆகி வருகிறார். வனவாசம் போன இராமருக்கு ஜென்ம குரு என்று சிலர் கூறுவார்கள். உங்களுக்கு அப்படி அல்ல. குரு ஜென்மத்தில் அமர்ந்தாலும், செவ்வாயின் சாரத்தை பெறுகிறார். அதாவது 2, 7-க்குரிய சாரத்தில் அமர்கிறார். திருமணம், குழந்தைபேறு போன்ற சுபவிஷயங்கள் அருமையாக நடக்கும். குரு பகவான், பஞ்சமஸ்தானத்தை பார்வை செய்வதால், பூர்வீக சொத்து கைக்கு கிடைக்கும். மனைவி வழியில் நன்மை நடக்கும். பாக்கியஸ்தானத்தை பார்வை செய்கிற காரணத்தால், தடைப்பட்ட கட்டடத்தின் கட்டுமானம் நடைப்பெறும். கோயில், புண்ணியஸ்தலம் செல்லும் பாக்கியம் கிட்டும். உத்தியோகத்தில் இடப்பெயர்ச்சி உண்டாகும். சற்று கடுமையாக உழைக்க வேண்டியதாக இருக்கும். வாகனம் வாங்கும் பாக்கியம் உண்டாகும்.

சரி, எந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும்?

உயர் அதிகாரிகளிடம் பணிவாக இருக்க வேண்டும். கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொழுதுபோக்கு, செலவு செய்யும் விஷயத்தில் கவனம் தேவை. மற்றப்படி, குரு பகவான் இந்த பெயர்ச்சியில் நன்மையே தருவார். நல்வாழ்த்துக்கள்.

விருச்சிக இராசி அன்பர்களே உங்கள் இராசிக்கு 12-ம் இடத்திற்கு குரு பகவான் 02.09.2017 அன்று பெயர்ச்சி ஆகி வருகிறார். 12-ல் குரு பகவான் வந்துவிட்டதே என்ற பயம் வேண்டாம். 6-க்குரிய குரு பகவான் 12-ல் வருவது நன்மையே தரும். குரு பகவான், செவ்வாய் சாரத்தில் இருப்பதால் சில இடையூறுகளும் வரலாம். ஆனால் 4, 6, 8-ம் இடங்களை குரு பார்வை செய்வதால், குடும்பத்தில் இருந்த சண்டைசச்சரவுகள், பிரச்னைகள் நீங்கும். வீடு, மனை அமையும். சில கடன் பிரச்னைகள் தீரும். வழக்கு இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள். சிலர் அயல்நாட்டுக்கு சென்று வேலை வாய்ப்பு, படிப்பு போன்ற அனுகூலங்கள் பெறுவீர்கள். திருமணம் ஆனவர்களுக்கு தங்களின் துணைவன்துணைவியால் நன்மைகள் நடக்கும். பிரயாணங்கள் அதிகரிக்கும். பெற்றோருடன் சில நேரங்களில் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். காரணம், ஒன்பதாம் இடத்திற்கு 12-யை குரு பார்வை செய்வதால் இத்தகைய விஷயங்கள் ஏற்படும். தொழில்துறையில் முன்னேற்றம் வரும். பொன்பொருள் சேரும்.

சரி, எந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ?

பேச்சில் நிதானம், பர,பரப்பு கூடாது. வயிற்று பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி குரு பெயர்ச்சி உங்களுக்கு யோகமே தரும். நல்வாழ்த்துக்கள்.

தனுசு இராசி அன்பர்களே  உங்கள் இராசிக்கு குரு பகவான் 11-ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். 11-ம் இடத்திலிருந்து உங்கள் இராசிக்கு 3, 5, 7-ம் இடங்களை பார்வை செய்வதால் சில காரியங்கள் வெற்றி பெறும். 12, 5-க்குரிய செவ்வாய் சாரத்தில் அமர்கிறார். எதிர்பாரா தனலாபம் கிடைக்கும். திருமணம், குழந்தைபேறு உண்டாகும். கூட்டு தொழில் நன்மை அளிக்கும். தொடங்கப்பட்டு பாதியில் நின்ற கட்டடத்தை கட்டி முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். அலைச்சல் இனி இல்லை. செலவுகள் கட்டுப்படும். நண்பர்கள் உதவியால் குடும்பத்தில் நிலவிய பிரச்னைகள் தீரும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். உறவினர் வருகை, கேளிக்கை ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். நோய், நொடிகள் அகலும்.

நீங்கள் உஷாராக இருக்க வேண்டியது பிரயாணங்களில்தான். அதுபோல, பொருட்கள் திருடு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் உடல்நலனிலும், பெற்றோர் உடல்நலனிலும் கவனம் தேவை. குரு பகவான், செவ்வாய் சாரத்தில் அமர்வதால், விரயங்கள் அதிகமாக ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். பிறருக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதையும் தவிர்க்கவும். பொதுவாக, இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் உங்களுக்கு நன்மைகள் தருவார். நல்வாழ்த்துக்கள்.

மகர இராசி அன்பர்களே உங்கள் இராசிக்கு 10-ம் இடத்திற்கு 02.09.2017 அன்று குரு பகவான் பெயர்ச்சி ஆகி வருகிறார். 11, 4-க்குரிய செவ்வாய் சாரத்தில் அமர்வதால் நன்மைகளை நன்றாக தருவார். 10-ல் வந்த குரு பகவான், தனஸ்தானம், சுகஸ்தானம், ரோகஸ்தானம் எனும் 2, 4, 6-ம் இடங்களை பார்வை செய்வதால் தனலாபம் உண்டு. நினைத்தது நடக்கும். எதிர்பார்த்ததை விட அதிகமாக பணவரவு அமையும். தடைப்பட்ட கல்வியும், தொழிலும் புத்துயிர் பெரும். சிலருக்கு புதிய தொழிலும் அமையும். இத்தனை நாட்கள் இருந்த வழக்கு விவகாரங்கள் வெற்றி அளிக்கும். சொத்துக்கள் வாங்கும் பாக்கியம் ஏற்படும். வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டுக்கு குடியேறுவீர்கள். உறவினர்கள் உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். சகோதரசகோதரிகளால் நன்மை ஏற்படும். சுபநிகழ்ச்சிகள் வீட்டில் அமர்களப்படும். பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும்.

சரி, நீங்கள் எந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும் தெரியுமா?

வாகன விஷயத்திலும், பெரியவர்களிடமும் கண்டிப்பாக உஷாராக இருக்க வேண்டும். கணக்கு வழக்கில் கவனமாக இருங்கள். உயர் அதிகாரிகள் வசம் பணிவு தேவை. பொதுவாக, இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் நன்மையே செய்வார். நல்வாழ்த்துக்கள்.

கும்ப இராசி அன்பர்களே உங்கள் இராசிக்கு குரு பகவான் 02.09.2017 அன்று 9-ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகி வருகிறார். செவ்வாய் சாரத்தில் அதாவது 3, 10-க்குரிய சாரத்தில் அமரப்போவதால் நன்மைகள் அதிகம் செய்வார். குரு பகவான் உங்கள் ஜென்ம இராசியையும், கீர்த்திஸ்தானத்தையும், பஞ்சமஸ்தானத்தையும் பார்வை செய்வதால் உங்கள் புகழ் ஓங்கும். மற்றவர்கள் பெருமைபட பேச வைக்கும். உடலில் புது பொலிவு உண்டாகும். தொட்டது துலங்கும். பொன் ஆபரணங்கள் சேரும். திட்டங்கள் வெற்றி பெறும். பலநாட்கள் பட்ட துன்பங்கள் தூசுபோல் பறந்து போகும். தொழில்துறையினர் பிரமாதமாக முன்னேறுவார்கள். புதிய தொழிலும் உருவாகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, இடப்பெயர்ச்சி பெறுவார்கள். வீடு, மனை அமையும். பொதுவாக குரு பகவான் பல நன்மைகளை வாரி வழங்குவார்.

சரி, எந்த விஷயத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

கொடுக்கல்வாங்கலில் மிக, மிக கவனமாக இருக்க வேண்டும். பெற்றோரை பகைத்துக் கொள்ளாதீர்கள். சிலருக்கு பித்ரு தோஷங்களால் சில பிரச்னைகளும் ஏற்படும். சகோதரசகோதரி வழியில் பிரச்னைகள் வராதபடி பேச வேண்டும். மற்றபடி, குரு பகவான் இந்த குரு பெயர்ச்சியில் நன்மையே செய்வார். நல்வாழ்த்துக்கள்.  
மீன இராசி அன்பர்களே உங்கள் இராசிக்கு 8-ம் இடத்திற்கு 02.09.2017 அன்று குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். அஷ்டம குரு கெடுதல் செய்யும் என்பது பொது கருத்து. அதனை எடுத்துக்கொள்ள வேண்டாம். தன, பாக்கியாதிபதியான செவ்வாய் சாரத்தில் குரு அமர்வதாலும், உங்கள் இராசிநாதன் மற்றும் ஜீவனாதிபதியான குரு பகவான், கேந்திராதிபதி ஆவதாலும், கேந்திராதிபதி கெடுவதால் கெடுதல் செய்ய மாட்டான். உங்கள் இராசிக்கு 2, 4, 12-ம் இடத்தை குரு பார்வை செய்வதாலும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வாழ்க்கை அமையும். குடும்பத்தில் நிலவிய சண்டை, சச்சரவுகள் அகலும். தனலாபம் பெருகும். பொன்பொருள் சேரும். இடப்பெயர்ச்சி உண்டாகும். உத்தியோகத்திலும் இடப்பெயர்ச்சி சிலருக்கு ஏற்படலாம். புது வாகனம் வாங்கும் யோகம் இருக்கிறது. தெய்வ தரிசனம், புண்ணியஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் அமையும். இதுநாள்வரை பிடித்திருந்த நோய் நொடி விலகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

சரி, எந்த விஷயத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தெரியுமா?

பெற்றோரின் உடல்நலனில் கவனமாக இருங்கள். மற்றவர்களின் பேச்சை கேட்டு நடப்பது பெரிய பாதிப்பை உருவாக்கிவிடும். வழக்கு விவகாரங்களில் மிகுந்த எச்சரிக்கை உணர்வு தேவை. மற்றபடி, இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் நல்லதே செய்வார். நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் எனது இனிய குரு பெயர்ச்சி நல்வாழ்த்துக்கள். நன்றி !










For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com






© 2011-2017 bhakthiplanet.com  All Rights Reserved