Saturday, May 11, 2013

சொந்த வீடு யோகம் யாருக்கு?


Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  


“எவ்வளவோ உழைச்சேன். வயசு 70 ஆகிடுச்சு. இதுவரை சொந்த வீடு உண்டா? சொந்த நிலம் உண்டா? நேற்று வந்தவன் என்னமா வீடு கட்டி அமர்க்களமா இருக்கான்.”. இது வயதான பெரியவர் ஒருவரின் புலம்பல். 

ஆம். மனைவி, வீடு இவை இரண்டும் அமைய கொடுத்து வைக்க வேண்டும். இதில் மனைவி எப்படியும் அமைந்துவிடுகிறது. ஆனால் சொந்த வீடு அமைவது சாதாரண விஷயமா? அடேங்கப்பா. நிலம் வாங்கியவர்களை, பிளாட் வாங்கியவர்களை கேட்டு பாருங்கள். அவர்கள் போட்ட குட்டிகரணம் எவ்வளவு என்று. “அப்பாடா, நொந்து நூடுல்ஸ் ஆகி எப்படியோ பிளாட் வாங்கிவிட்டேன்.” என்பார்கள்.

வீடு அமைவது சாதாரண விஷயம் இல்லை. ஜோதிட ரீதியாக யாருக்கு சொந்த வீடு அமைகிறது என்று பார்த்தால், ஜாதகத்தில் லக்கினத்திற்கு 4-ம் ஸ்தானம் யாருக்கு சிறப்பாக அமைந்து இருக்கிறதோ, அவர்களுக்கு எதிர்பாராமல் சொந்த வீடு – மனை யோகம் அமைகிறது.

சிலர் சொல்வார்கள், “அட எனக்கு நிலம் வாங்கும் ஐடியாவே இல்லப்பா. நம்ம பங்காளி வந்தான், மாமா உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது எடுத்து வா என்று சொல்லி என்னை அழைத்துக்கொண்டு சென்றான். அந்த நிலத்தின் சொந்தகாரரிடம் என்னை அறிமுகபடுத்திவைத்துவிட்டு, என்னிடம் இருந்த பணத்தை அவரிடம் கொடுத்தான். பிறகு சிறுக சிறுக பணத்தை அவரிடம் கொடுத்தேன். காலம் போனதே தெரியலே. இப்போ முழுதொகையும் கொடுத்துவிட்டேன். நிலத்தையும் என் பெயருக்கு பத்திரம் பண்ணியாகிவிட்டது.” என்று கூறுவார்கள்.

வேடிக்கை என்னவென்றால், நிலம் வாங்க வேண்டும் என்று பணத்தை பையில் எடுத்துக் கொண்டு காகம் போல் அலைவார்கள். ஒரு அங்குலம் நிலம் கூட சரியாக அமையாது. பிறகு ஏதாவது ஒரு செலவில் கையில் இருந்த காசும் பனிக்கட்டி போல கரைந்து போகும். இதே நிலைதான் சொந்த வீடு தேடுபவர்களுக்கும். என்னுடைய அனுபவத்தில் பார்த்து விட்டேன். பெரும் வசதி படைத்தவர், லட்ச ரூபாய் வாடகை வீட்டில் இருப்பார். மாதம் குறைந்த வருமானம் சம்பாதிப்பவரோ சொந்த பிளாட் வாங்கி அமோகமாக இருப்பார்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், பணத்தில் கோடிஸ்வரராக புரளுபவர் சொந்த வீடு இல்லாமல் இருப்பார். அவரிடம் வேலை பார்க்கும் குமஸ்தாவோ சொற்ப சம்பளத்தையே இறுக்கி பிடித்து சேர்த்து வைத்து,  எப்படியோ சொந்த வீட்டை வாங்கி விடுவார்.

இதற்கு காரணம், அப்படிப்பட்டவர்களின் வலுவான ஜாதக அமைப்பு. அவர்களின் ஜாதகத்தில் 4-ம் ஸ்தானத்தின் சிறப்பு அது. லக்கினத்திற்கு 4-ம் ஸ்தானம் வண்டி, தாயார், கல்வி, மகிழ்ச்சி இவ்வாறான அம்சங்களை காட்டும் இடம். அதாவது சொந்த வீடு அமையுமா? என்று பார்க்க வேண்டுமானால், சுகஸ்தானம் என்கிற இந்த 4-ம் ஸ்தானத்தை பார்க்க வேண்டும்.

அந்த 4-ம் ஸ்தானத்தில் லக்கினத்திற்கு 6,8,12-க்குரிய கிரகங்கள் அமைந்தாலோ (தனித்து)  அல்லது 4-க்குரியவன், 6,8,12-ல் போய் அமர்ந்தாலோ சொந்த வீடு அமைவது தெய்வாதீனம்தான். 4-ல் இராகு-கேது அமைந்தாலோ, இவற்றுக்கு சுபர் பார்வை இல்லாமல் இருந்தாலோ சொந்த வீடு அமைவது சற்று கடினமே.

4-.க்குரியவன் சுபர்  சாரம் பெற்று, குரு பார்வை வாங்கி இருந்தால் சொந்த வீடு அமைவது உறுதி.

4-ம் ஸ்தானத்தில், பாக்கியாதிபதி அல்லது லாபாதிபதி அமர்ந்திருந்தாலும், 4-ல் சனி அமர்ந்து 2,4,5,9,11க்குரிய பார்வை வாங்கி இருந்தாலும் சொந்த வீடு நிச்சயமாக அமையும்.

சொந்த வீடு வாங்க கடன் கிடைப்பதற்கு ஐ.டி பேப்பர் எவ்வளவு முக்கியமோ அதுபோல முதலில் சொந்த வீடு யோகம் உள்ளதா? என பார்க்க உங்கள் ஜாதகம் முக்கியம். அதில் 4-ம் வீட்டின் கிரக நிலைகளை பாருங்கள் அதற்கு விடை கிடைக்கும். வாழ்க வளமுடன்.


For More Articles in ENGLISH & TAMIL Visit: www.bhakthiplanet.com
 

Matrimony
Free Register For All Community REGISTER NOW  http://www.manamakkalmalai.com

Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
www.bhakthiplanet.com
 
http://bhakthiplanet.com/ebooks/



For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com  

© 2013 www.bhakthiplanet.com All Rights Reserved