Sunday, January 3, 2016

அனுமனுக்கு உகந்தது என்ன? அதன் பலன் என்ன? அனுமன் ஜெயந்தி சிறப்பு கட்டுரை பகுதி 2





Written by Niranjana

சிவபெருமானுக்கு பிடித்தமானது வில்வம். வில்வ இலையை சிவபெருமானுக்கு சமர்பித்தால் செல்வ வளமை கிடைக்கும். வில்வ இலையில் ஸ்ரீலஷ்மி இருப்பதால் இந்த பலன் கிடைக்கிறது. அதேபோல பெருமாளுக்கு பச்சை கற்பூரம் மிகவும் பிடிக்கும். அதனால்தான் திருப்பதியில் வருடம் முழுவதும் பச்சைகற்பூரத்தை சுவாமியின் திருமேனியில் தடவுகிறார்கள். விநாயகருக்கு அறுகம்புல்.

இதை ஆனைமுகனுக்கு அணிவித்தால் அந்த பக்தனுக்கு ஏறுமுகம்தான். அத்துடன் உடல் உஷ்ணமும் நீங்கும், உடல் உபாதைகள் நீங்கும். அம்மனுக்கு உகந்தது பால் அபிஷேகம், வேப்பிலை. இதை அம்மனுக்கு தந்தால் குடும்பத்தில் இருக்கும் அனைத்து தரித்திரமும் விலகும்.

இப்படி ஒவ்வொரு தெய்வங்களுக்கும் அவர்களின் இஷ்டத்திற்குரியவற்றை தந்தால் கஷ்டம் தீரும்நல்ல பலன் கிடைக்கும். காணிக்கை கொடுத்தால்தான் பலன் கிடைக்குமா? என்றால் அப்படியில்லை. ஏழையை நல்ல அந்தஸ்துக்கு இறைவன் ஒருவரால் மட்டுமே கொண்டு செல்ல முடியும். அதனால் பக்தியுடன் அந்த ஏழை எது தந்தாலும் இறைவன் ஏற்பார். பக்தி இல்லாத வழிபாடு வெறும் நிகழ்ச்சியாகவே இருக்குமே தவிர, அதனால் தெய்வீகதன்மை எதுவும் இருக்காது.

மருத்துவனுக்கு கொடுப்பதை விட வணிகனுக்கு கொடு என்ற ஒரு கருத்து உண்டு. காரணம் உணவே மருந்து என்பார்கள். அதுபோலதான் இறைவனுக்கு சமர்பிக்கும் காணிக்கையால் தர்ம குணம் உண்டாகி புண்ணிய கணக்கில் சேரும். செல்வம் சேர சேர பிறருக்கும் தந்து உதவ வேண்டும் என்கிற மனபக்குவம், திருக்கோயிலுகளுக்கு காணிக்கை தருவதில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. உண்மையான இறை நம்பிக்கை உள்ளவன் சத்தியத்திற்கும்தர்மத்திற்கும், கடமைக்கும், பாசத்திற்கும் கட்டுப்பட்டவனாக இருப்பான். மொத்தத்தில் மனிதன்மனிதனாக இருப்பான். சரி நம் வீர அனுமனுக்கு என்னனென்ன காணிக்கைகள் இஷ்டமானது என்பதையும், அதன் பலனாக கிடைக்கும் நன்மை என்ன என்பதையும் பார்க்கலாம்.

வடை மாலையின் மகிமை
இராகுவை போல் கொடுப்பார் இல்லை என்பார்கள். அந்த இராகுபகவான் நமக்கு நம்மை செய்ய வேண்டுமானால், ஆஞ்சனேயருக்கு வடைமாலை சாத்த  வேண்டும். அதுவும் உளுந்துவடை சாத்தினால், இராகு தோஷம் நீங்கும். இராகுவை விரட்டி அடித்தவர் நம் அனுமார். அதனால் இராகுபகவான், அனுமானின் பேச்சை கேட்டுதான் ஆகவேண்டும். அதனால்தான் சில வடஇந்தியர்கள்  உளுந்தால் தயாரித்த ஜாங்கிரியை ஆஞ்சனேயருக்கு தருவார்கள். நாம் வடைமாலை சாத்துகிறோம். திருமணதடைக்கும், செல்வ தடைக்கும் இராகுபகவானும் முக்கிய காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அனுமாருக்கு வடைமாலை அணிவித்து ராகுதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவோம்.

வெண்ணைய் தத்துவம்
ஸ்ரீராமருக்கும் இராவணனுக்கும் நடந்த போர் உச்சகட்டத்தில் இருந்தது. அப்போது இராவணன், சரமாரியாக அம்புகளை ஏய்தார். இதனால் ஸ்ரீஇராமருக்கும், லட்சுமணனுக்கும் காயம் ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணத்தில், அவர்களை தன் தோளில் சுமந்துக் கொண்டே சென்றார் அனுமார். அப்போது இராவணனின் அம்புகள் அனுமானை தாக்கி, அவர் உடலில் காயங்கள் ஏற்பட்டது. அந்த காயங்களின் எரிச்சல் தணிய, அதற்கு மருந்தாக வெண்ணையை தன் உடலில் பூசிக்கொண்டார். வெண்ணை குளிர்ச்சிதன்மை கொண்டது. அத்துடன் மேலும் அம்புகள் அதிகம் தன் உடலை தாக்க முடியாதபடி இருக்க வெண்ணையை தம் உடல் முழுவதும் பூசிக்கொண்டார் அனுமார்.

பெற்றவள் வயிறு குளிர்ந்தால் பிள்ளைகளின் வம்சம் செழிக்கும்என்பதைபோல், அனுமாருக்கு வெண்ணை அணிவித்தால் குடும்பத்தில் இருக்கும் இன்னல்கள் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

செந்தூரம் அணிவிப்பது ஏன்?
அசோகவனத்தில் சீதையை கண்டுபிடித்த அனுமார், மகிழ்ச்சியுடன் சீதாதேவியின் அருகில் சென்று வணங்கினார். அப்போது சீதாபிராட்டியின் நெற்றி வகுடில் சிகப்பாக கீறல் போல கோடு இருந்ததை கண்ட அனுமார், “தாயேயார் உங்கள் நெற்றியில் காயத்தை உண்டாக்கியது.? சொல்லுங்கள். அவர்களை கொன்றுவிடுகிறென்.” என்றார் கோபமாக.அதற்கு சீதை, “இது ரத்த காயம் இல்லை அனுமன். சுமங்களி பெண்கள் நெற்றிவகுடில் குங்குமம் வைத்தால் கணவரின் ஆயுள் அதிகரிக்கும்.” என்றார்.

சின்ன குங்குமத்துக்கே இவ்வளவு மகிமை என்றால், அதனை உடல் முழுவதும் பூசிகொண்டால் எவ்வளவு பலன் கிடைக்கும். என்ற எண்ணத்தில், தன் உடல் முழுவதும் செந்தூரத்தை  பூசிக்கொண்டு, அன்புமிகுந்த பக்தியை செலுத்தினார் அனுமார்.

யார் அனுமாருக்கு செந்தூரம் அணிவிக்கிறார்களோ, ஆஞ்சனேயர்  மகிழ்ச்சி அடைந்து, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி தருவார்.
வெற்றிலை ஏன் அணிவிக்க வேண்டும்?
அசோகவனத்தில் சீதையை கண்டு பேசிவிட்டு விடை பெற்றார் அனுமார். அப்போது அனுமாருக்கு இராவணனால் ஏதாவது ஆபத்து நேருமோ என்று அஞ்சிய சீதை, அனுமாருக்கு எந்த தீங்கும் நேராமல் இருக்க, மலர்களால் ஆசி வழங்க நினைத்தார். ஆனால் அசோகவனத்தில் அவை கிடைக்காததால் தன் அருகில் இருந்த வெற்றிலைகொடியில் இருந்து வெற்றிலையை பறித்து, அனுமார் தலையில் வைத்து, “உனக்கு வெற்றி. நீண்ட ஆயுளுடன் இருப்பாய்.” என்று ஆசி வழங்கினார் சீதாபிராட்டி

மேலும் அனுமார், இலங்கையை விட்டு செல்லும் போது, அவருக்கு  குளிர்ச்சியாலும், விஷ பூச்சிக்களாலும் அனுமனின் உடலுக்கு எந்த தீங்கும் நேரக்கூடாது என்ற எண்ணத்தில், உஷ்ணதன்மையும் விஷம் முறிக்கும் ஆற்றலும் கொண்ட வெற்றிலையை அனுமாருக்கு மாலையாக அணிவித்து ஆசி வழங்கினார் சீதை.

ஆஞ்சனேயருக்கு வெற்றிலைமாலை அணிவித்தபிறகுதான் சீதை வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. ஸ்ரீராமரை எப்போது காண்போம் என்ற கவலையில் இருந்த சீதையின் மனதில் தெளிவு பிறந்தது. இராவண வதம் முடிந்து ஸ்ரீஇராமருடன் இணைந்தார் சீதை. அனுமாருக்கு வெற்றிலைமாலை அணிவித்தால் தடைகள் நீங்கி எதிலும் வெற்றி கிடைக்கும்.

துளசி மாலை
பெருமாளுக்கு துளசி இஷ்டமானது. அத்துடன் துளசிவாசம் செல்வம் பெருக செய்யும் என்ற தத்துவமும் உண்டு. துளசிமாலையை அனுமாருக்கு அணிவித்தால் செல்வம் பெருகும்.
அஞ்சனை மைந்தனை வணங்கி அஞ்சாத மனம் பெற்று வாழ்நாளில் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ அனுமார் நமக்கு துணையிருப்பார்.

ஆஞ்சநேயரின் வாலில் இளநீர் கட்டி வேண்டிக்கொண்டால் கிரகதோஷம் நீங்கும்.

துயரங்களை தூக்கி எறியும் ஆஞ்சநேயர்

ஆட்டி படைக்கும சர்ப்ப தோஷத்தை அடக்குவார் அனுமான்

அனுமனுக்கு உகந்தது என்ன? அதன் பலன் என்ன?


Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 








© 2016www.bhakthiplanet.com All Rights Reserved