Wednesday, November 11, 2015

சிக்கல் சிங்காரவேலனின் ஆலயத்தில் ஐப்பசி மாதம் நடக்கும் அதிசயம்! கந்த சஷ்டி விழா சிறப்பு கட்டுரை

Written by Niranjana

சிக்கல் சிங்காரவேலன் திருக்கோயில் நாகப்பட்டினத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது.

சிக்கல் என்று ஊரின் பெயருக்கு காரணமானவர்

சிவனை நினைத்து தவம் செய்ய ஏற்ற இடம் தேடி வசிஷ்ட முனிவர் பல ஊர்களுக்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது ஓர் அடர்ந்த காட்டுபகுதியை கண்ட முனிவர், இந்த இடம் தவம் செய்ய ஏற்றது என்பதை உணர்ந்து அந்த இடத்தில் தவம் செய்ய துவங்கினார். தவம் செய்வதற்கு முன்னதாக சிவலிங்கத்தை செய்து வழிப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று எண்ணினார். மண்ணில் லிங்கம் செய்யலாம் என்றால், பலரும் அவ்வாறு அதை செய்துவிட்டார்கள். நாம் புதுமையாக ஒரு உணவு பண்டத்தில் சிவலிங்கம் செய்து வழிபட்டால் நன்றாக இருக்குமே என்று கருதி, காமதேனு பசுவின் பாலை எடுத்து வெண்ணையாக கடைந்து, அந்த வெண்ணையில் லிங்கம் செய்து வழிப்பட்டு தவம் செய்தார் வசிஷ்டர்.

வசிஷ்டரின் தவத்தை ஏற்ற சிவபெருமான், முனிவருக்கு காட்சி தந்து, “உனக்கு என்ன வரம் வேண்டும்?” எனக் கேட்டார். “அய்யனேநான் செய்து இருக்கும் இந்த வெண்ணை லிங்கத்தில் தாங்கள் எழுந்தருள வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார் முனிவர். முனிவரின் விருப்பபடி ஈசனும் வெண்ணை லிங்கத்தில் தோன்றி அருளினார். அதுவே நவநீதேஸ்வரர் என்று அழைக்கபடுகிறது. சிவபெருமானின் சக்தி படைந்த இந்த வெண்ணை லிங்கத்தை, வேறு ஒரு இடத்திற்கு மாற்றினால் நன்றாக இருக்குமே என்று கருதிய வசிஷ்ட முனிவர், வெண்ணை லிங்கத்தை தூக்கி எடுக்க முயற்சித்தார். ஆனால் சிவலிங்கம் பாறையை போன்று தரையில் கெட்டியாக பிடித்து கொண்டு அசைய மறுத்தது. இது என்ன சிக்கலாக போயிற்றே என்று கூறி கொண்டே, சரி சிவபெருமானின் விருப்பம் இதுவே எனில் இதே இடத்தில் சிவலிங்கம் இருக்கட்டும் என்று முடிவு செய்து, வணங்கினார். ஆக, வசிஷ்டமுனிவர் அந்த இடத்திற்கு வைத்த பெயர்தான் சிக்கல்.

சிக்கலுக்கு சென்றால் சிக்கல் தீரும் என்று காமதேனுவுக்கு அருளிய சிவன்.

வருடக்கணக்கில் மழை பெய்யாததால் காமதேனு உணவு கிடைக்காமல் அவதிப்பட்டது. ஓர் இடத்தில் நாய் ஒன்று இறந்து கிடந்ததை கண்ட காமதேனு, பசி ருசி அறியாது என்பதற்கேற்ப இறந்து கிடந்த நாயை சாப்பிட்டது.  இதை கண்ட சிவபெருமான் பெரும் கோபம் அடைந்து, காமதேனுவின் எதிரே தோன்றி, “உனக்கு உணவு இல்லை என்றால் என்னை வேண்டிக் கேளாமல் நீ தேவலோக பசு என்பதையும் மறந்து குணம் கெட்டு பசியில் புலி எந்த மாமிசத்தையும் தின்பதை போன்று நீயும் புலியின் குணம் கொண்டாய். பசுவின் புனித முகத்தை வைத்துக் கொண்டு புலியை போல மாமிசம் சாப்பிட்டதால் இனி நீ உன் முகம் புலியாக மாறக் கடவது.” என்று சபித்தார்.

பசுவின் உடலும் புலியின் முகமும் அடைந்து காமதேனு விசித்திர விலங்காக இருந்ததால் பூலோகத்தில் மக்கள் யாவரும் காமதேனுவை கண்டு பயந்து ஓடினார்கள். சிறுவர்கள் கல்லால் காமதேனுவை அடித்தார்கள். இனியும் சாபத்தை பொறுக்க முடியாத காமதேனு, சாபம் தந்த சிவபெருமானிடம் மன்னிப்பு கோரியது.

என் அய்யனே.. பசியின் கொடுமையில்தான் இறைவன் இருப்பதையே மறந்தேன். என் புனிதத்தை நானே கெடுத்துக் கொண்டதற்கு பசியே காரணம். என்னை மன்னித்துவிடுங்கள் அல்லது என்னை கொன்றுவிடுங்கள்.” என்று கதறியது காமதேனு.
காமதேனுவின் கதறல் சிவபெருமானின் கோபத்தை சாந்தப்படுத்தியது. “நீ வசிஷ்ட முனிவர் தவம் செய்த சிக்கல் என்கிற தலத்திற்கு சென்று என்னை வழிப்படு. உன் சிக்கல் தீரும்.”. என்றார் ஈசன். சிக்கலுக்கு வந்த காமதேனு தவம் இருந்து தன் அழகிய முகத்தை திரும்பப் பெற்றது.

சிறுவன் உருவாக்கிய சிக்கல் முருகன் சிலை 

எட்டிக்குடி என்ற நாட்டை முத்தையா என்ற அரசர் ஆட்சி செய்து வந்தார். இவர் ஆட்சியில் விஸ்வ குலத்தை சேர்ந்த சிறந்த கலைதிறன் படைத்த ஒரு சிறுவன் தீவிர முருகன் பக்தனாக திகழ்ந்தான். ஒருநாள் அவன் கனவில் முருகப் பெருமான் காட்சி தந்து, உன் திறமையை வைத்து என்னை சிலையாக வடிவமைத்து வணங்கு. இதனால் உனக்கும் உன் வம்சத்திற்கும் பூலோகம் இருக்கும்வரை புகழ் இருக்கும்.” என்றார்.

தன்னுடைய கனவை மறுநாளே நிறைவேற்ற முடிவு செய்து, ஒரு மலை பகுதிக்கு சென்று சிலையை வடிவமைக்க ஏற்ற பல கற்களை பரிசோதித்து அதில் ஒரு கல், நல்ல தரமாகவும் உயிரோட்டத்துடனும் இருப்பதை கண்டுபிடித்து,  அந்த கல்லை எடுத்து வந்து அழகான முருகன் சிலையை செய்ய துவங்கினான். முருகனின் திருநாமத்தை உச்சரித்து கொண்டே சிலையை வடிவமைத்து வந்தான்.

அப்போது முருகனின் சிலையில் இருந்து வியர்வை வடிய ஆரம்பித்தது. இதை கண்ட சிற்பியான அச்சிறுவன், ஊர் மக்களிடம் தகவல் சொன்னான். ஊர் மக்களில் ஒருவர் பின் ஒருவராக வந்து பார்த்துவிட்டு, முருகனின் சிலையில் வியர்வை வடிவதை கண்டு வியந்தார்கள். பிறகு இந்த தகவல் அரசர் முத்தையாவின் காதில் விழுந்தது.

இது உண்மையான தகவலா என அறிய அரசரே நேரில் வந்து முருகனின் சிலையை கண்டார். நேரில் பார்த்த அரசர் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார். முருகனின் முகத்தில் இருந்து வியர்வை வடிந்து கொண்டே இருந்தது. ஏன் இது போல் நடக்கிறது.? ஏதாவது தெய்வ குற்றமா? என்று அறிய அருள்வாக்கு கேட்கப்பட்டது. சூரபத்மனை கொல்ல முருகப் பெருமான், அன்னை பராசக்தியிடம் வீரவேல் வாங்கினார். அன்னையின் சக்தி முழுமையாக அவ்வேலில் இருந்ததால் வேலின் உஷ்ணமும் உக்கிரமும் தாங்காமல் முருகனின் உடலில் இருந்து வியர்வை வடிந்தது. அந்த சம்பவத்தை மனதில் நினைத்துக்கொண்டே சிற்பியான சிறுவன் இச்சிலையை வடிவமைத்ததால் முருகப்பெருமான் இந்த சிலையின் வடிவில் இங்கே வந்துவிட்டார். அதனால்தான் முருகனின் சிலையிருந்து வியர்வை வடிகிறது. அதனால் பயம் வேண்டாம்.” என்று அருள்வாக்கு சொல்லப்பட்டது.

இதை கேட்ட அரசர், “சிங்காரவேலனே இந்த சிலையின் உயிராக வந்துள்ளாரா…  இந்த முருகனை இடத்தில் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்ய வேண்டும்.” என்று கூறினார்.

முருகப் பெருமானை பிரதிஷ்டை செய்து சிக்கல் சிங்காரவேலனுக்கு ஆலயம் எழுப்பினார் அரசர். சூரபத்மனை வீழ்த்துவதற்காக அன்னையிடம் வேல் வாங்கும் போது வேலின் சக்தியின் உஷ்ணத்தை தாங்காமல் முருகனின் முகத்தில் வியர்வை வடிந்தது. இன்றுவரை ஐப்பசி மாதம்  விழாவில் முருகனின் சிலையில் இருந்து வியர்வை வடியும் காட்சியை பார்க்கலாம்.


சிக்கல் சிங்காரவேலனை வணங்கினால் வாழ்க்கையில் இருக்கும் எத்தனை சிக்கல்களும் தீரும் என்பது பயன் அடைந்த பக்தர்களின் அசைக்க முடியாத  நம்பிக்கை.

Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 










© 2015www.bhakthiplanet.com All Rights Reserved